கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.
இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டி, செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் படேல் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்து அனுப்பிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் உஸ்மானி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
ஐக்கிய அரபு அமீரக அரசு கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளது. கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கரோனாவால் மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அனைத்துத் துறைகளும் இணைந்து வெற்றிகரமான ஐபிஎல் போட்டியை நடத்துவோம் என நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.