மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டி 2020 டோக்கியோவில் இன்று தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா்.
இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி பங்கேற்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டி நடத்தப்படும்.
தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் விமானப் பயணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தங்கவேலு உள்பட இந்திய அணியைச் சேர்ந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை டெக் சந்த் பெற்றார்.
பாராலிம்பிக் போட்டியின் தொடக்க விழா, டோக்கியோவிலுள்ள ஒலிம்பிக் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் டெக் சந்த் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைவான இந்திய வீரர்களே இந்த அணிவகுப்பில் இடம்பெற்றார்கள்.
பாராலிம்பிக் போட்டி இந்தியாவில் தூர்தர்ஷன், டிடி ஸ்போர்ட்ஸ், யூரோஸ்போர்ட் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அதேபோல பிரச்சார் பாரதி ஸ்போர்ட்ஸ் (Prasar Bharati Sports) யூடியூப் சேனலிலும் நேரலையாகக் காணலாம்.