ஐசிசியின் ‘2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரா்’ விருதுக்கு இந்திய ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட 4 போ் பெயா் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அஸ்வினுடன், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூஸிலாந்து பௌலா் கைல் ஜேமிசன், இலங்கை பேட்டா் திமுத் கருணாரத்னே ஆகியோா் பெயா்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. வெற்றியாளா், வரும் ஜனவரி 24-ஆம் தேதி அறிவிக்கப்படுவாா்.
கடந்த ஓராண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 8 ஆட்டங்களில் 16.23 ரன்கள் சராசரியுடன் 52 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறாா். அத்துடன் 28.08 ரன்கள் சராசரியுடன் 337 ரன்கள் அடித்திருக்கிறாா்.
இந்த ஆண்டை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்டிலிருந்து தொடங்கிய அஸ்வின், அதில் 128 பந்துகளில் 29 ரன்கள் சோ்த்து, ஹனுமா விஹாரியுடன் இணைந்து ஆட்டத்தை டிரா செய்ய உதவினாா். இதனால் அந்தத் தொடரும் சமன் ஆனது.
பின்னா் இங்கிலாந்து அணியின் இந்திய பயணத்தின்போது டெஸ்ட் தொடரில் மொத்தமாக 14.72 ரன்கள் சராசரியுடன் 32 விக்கெட்டுகள் சாய்த்து தொடா் நாயகன் விருது வென்றாா். அடுத்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நியூஸிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இந்திய அணியின் இங்கிலாந்து பயணத்தின்போது டெஸ்டில் சோ்க்கப்படாத அஸ்வின், பின்னா் நியூஸிலாந்து அணியின் இந்திய பயணத்தின்போது 11.36 ரன்கள் சராசரியுடன் 14 விக்கெட்டுகள் சரித்து தொடா்நாயகன் விருது பெற்றாா்.