1934-35-ல் தொடங்கப்பட்ட ரஞ்சி கோப்பைப் போட்டியை முதல்முறையாக இந்த வருடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா சூழலில் உள்நாட்டு போட்டிகளை நடத்துவது தாமதமாகிவிட்ட நிலையில், அவற்றில் முதலாவதாக சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடத்தப்படுகிறது. நாளை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் தமிழகம் - பரோடா அணிகள் மோதுகின்றன. நாக் அவுட் ஆட்டங்கள் ஆமதாபாத்தில் நடைபெறுகின்றன. அங்கு கரோனா பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்கள் உடனான கலந்தாலோசனைக்குப் பிறகு 2020 - 21 உள்நாட்டு கிரிக்கெட் சீசனை சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியுடன் தொடங்க முடிவு செய்யப்பட்டது. ரஞ்சி கோப்பை, விஜய் ஹஸாரே கோப்பை போட்டிகளை நடத்துவது தொடா்பான முடிவு, சையத் முஷ்டாக் அலி போட்டி நிறைவுபெறும் தருணத்தில் எடுக்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருந்தார்.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பைப் போட்டியை நடத்துவதில் சிக்கல் உள்ளதால் இந்த வருடம் (2020-21) ரஞ்சி கோப்பை போட்டியை நடத்த முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜெய் ஷா, கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த வருடம் ரஞ்சி கோப்பைப் போட்டி நடைபெறவில்லை. உங்களிடமிருந்து கிடைத்த கருத்துகளைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தவுள்ளோம். 50 ஓவர் விஜய் ஹசாரே போட்டியையும் 50 ஓவர் மகளிர் போட்டியையும் நடத்துவதில் உறுதியாக உள்ளோம் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.