இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் கொழும்பு பிரமதாசா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் அறிமுக வீரர்களாக பிருத்வி ஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் களம் கண்டனர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கட்ட பிருத்வி ஷா தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதன்பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர்.
இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் 50, ஷிகர் தவான் 46, சஞ்சு சாம்சன் 27 ரனகள் எடுத்தனர். இலங்கை அணியில் ஷமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட், கருணரத்னே ஒரு விக்கெட் வீழத்தினர்.