இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 73, ரோஹித் ஷர்மா 27, ஸ்ரேயாஸ் 24 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணியில் ஷகிப் 5, ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையே இன்று (டிச.4) முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய இந்திய அணி, நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா (27), தவான் (7), விராட் கோலி (9) ஆகியோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 24 ரன்கள் அடிக்க, ராகுல் அரை சதம் கடந்தார். எனினும் அதற்கடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 19 ரன்கள் சேர்க்க அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.
முடிவில் 41.2 ஓவர்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்களைக் குவித்தது.
இதனை அடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜ்முல் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
லிட்டன் தாஸ், அனாமுல், ஷாகிப் அல் ஹசன், ரஹிம் ஆகியோர் தங்களின் பங்குக்கு ரன்களைச் சேர்க்க, வங்கதேசத்தின் பக்கம் ஆட்டம் திரும்பியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் 41 ரன்களையும், ஹசன் மிராஸ் 38 ரன்களையும் சேர்த்தனர்.
முடிவில் 46 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வங்கதேச அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.