சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாக வாரியம் பரிந்துரைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 5-வது நாளாக தீவிர ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
இதையும் படிக்க | ரஷியா - உக்ரைன் இடையே முதல்கட்டப் பேச்சு: போரை நிறுத்தக் கோரிக்கை
இந்த நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் ரஷியா மற்றும் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக நிற்கும் பெலாரஸ் மீது நடவடிக்கைளை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"உலகளவிலுள்ள சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது அதிகாரத்துக்குள்பட்டு ரஷியா அல்லது பெலாரஸ் நாட்டிலிருந்து விளையாட்டு வீரர் அல்லது விளையாடு அதிகாரி எவரும் ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டுப் பிரதிநிகளாகப் பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது. ரஷியா அல்லது பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த தனி நபரோ அல்லது அணியோ அவர்களை நாடற்ற வீரர் அல்லது நாடற்ற அணியாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய சின்னமோ, நிறமோ, கொடியோ அல்லது கீதமோ காட்சிப்படுத்தக் கூடாது."