உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் கௌரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் இன்று முதல் (ஜூலை 28) ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்கள்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
செஸ் விளையாட்டு பிறந்த இடத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இந்தியாவுக்கு இது சிறப்பு வாய்ந்த தருணம். இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கும் அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.