இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது பாகிஸ்தான் அணி.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து வென்றது. 2-வது டி20 ஆட்டம் கராச்சியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. கேப்டன் மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்தார்.
இந்தக் கடினமான இலக்கை அபாரமாக விரட்டி சாதித்தார்கள் பாகிஸ்தான் தொடக்க வீரர்களான பாபர் ஆஸமும் முகமது ரிஸ்வானும். 19.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தூ வெற்றி பெற்றது பாகிஸ்தான். பாபர் ஆஸம் 110, ரிஸ்வான் 88 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். டி20 கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டையும் இழக்காமல் அதிக ரன்களை விரட்டியது இதுதான் முதல்முறை. 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலக்கை விரட்டும்போது அதிக ரன்கள் எடுத்த கூட்டணி என்கிற சாதனையையும் பாபர் ஆஸம் - ரிஸ்வான் படைத்துள்ளார்கள்.