ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்: ஆனந்த் பாராட்டு
இன்று விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றுள்ளது.
ஆவின் பால் பாக்கெட்டில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றதற்குப் பிரபல வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே), ஏஐசிஎஃப், தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் கௌரவமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இப்போட்டிக்கு ரூ.120 கோடியை ஒதுக்கி உள்ளது தமிழக அரசு.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்கள்.
Advertisement
Advertisement
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை முழுக்க ஏராளமான ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று விற்பனைக்கு வழங்கப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விஸ்வாநாதன் ஆனந்த் இதைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அவருடைய வீட்டுக்கு இன்று வழங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்து, காலையில் உங்களுடைய பால் பாக்கெட் இப்படி வழங்கப்பட்டால்... என்று இந்த விளம்பர முயற்சிக்குப் பாராட்டு தெரிவிக்கும்விதமாக ட்வீட் செய்துள்ளார்.