முகப்பு
செய்திகள்

கடைசி ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:08 PM
பகிர்:

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் குவித்துள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது. இந்தப் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபகர் சமான் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். ஃபகர் சமான் 27 ரன்களிலும், இமாம்-உல்-ஹக் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பாபர் அசாம் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். முகமது ரிஸ்வான் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.  அவர்களைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் அஹா சல்மான் மற்றும் முகமது நவாஸைத் தவிர மற்றவர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை.

இறுதியில், பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்பதீன் நயீப் மற்றும் ஃபரீத் அகமது மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும், ஃபரூக்கி,முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது. 

பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.