முகப்பு
செய்திகள்

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் ஓய்வுக்குத் திட்டமிட்டிருந்த தோனி!

இந்திய அணி தோல்வியடையும் முன்பே தனது ஓய்வு குறித்து தோனி யோசித்து வைத்திருந்ததாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:42 PM
பகிர்:

2019 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வியடையும் முன்பே தனது ஓய்வு குறித்து தோனி யோசித்து வைத்திருந்ததாக முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் கடைசியாக விளையாடி 2020 ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் 2019 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் விளையாடியபோதே ஓய்வு பற்றி தோனி மறைமுகமாகத் தெரிவித்ததாக இந்திய அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றிய ஆர். ஸ்ரீதர், தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

மான்செஸ்டரில் நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றில் மழை காரணமாக கூடுதல் நாளிலும் ஆட்டம் தொடர்ந்தது. அந்த நாளன்று காலை உணவுக்கு முதல் ஆளாக நான் சென்றேன். நான் காஃபி குடித்துக் கொண்டிருந்தேன். தோனியும் ரிஷப் பந்தும் வந்தார்கள். என்னுடன் வந்து அமர்ந்தார்கள். நியூசிலாந்தின் இன்னிங்ஸ் முடிய சில ஓவர்களே இருந்தன. அதன்பிறகு இந்திய அணி விளையாட வேண்டும். எனவே அன்றைய நாள் சீக்கிரமே முடிந்துவிடும். இதனை மனத்தில் வைத்து, நம் அணி வீரர்களில் சிலர் தனியாக லண்டனுக்குச் சீக்கிரமே செல்லவுள்ளார்கள். நீங்களும் வருகிறீர்களா என்று தோனியிடம் கேட்டார் ரிஷப் பந்த். இல்லை ரிஷப். அணி வீரர்களுடான என்னுடைய கடைசிப் பேருந்துப் பயணத்தை நான் தவறவிட விரும்பவில்லை என்றார் தோனி. இதைக் கேட்ட நான், தோனியின் மீதான மரியாதை காரணமாக அவருடைய இந்த முடிவை யாரிடமும் சொல்லவில்லை. இந்த விஷயத்தை அப்போது பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியிடமும் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த பரத் அருணிடமும் என் மனைவியிடமும் கூட நான் கூறவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.