நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்!
உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் விளையாடின. ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் மற்றும் சௌத் ஷகீல் தலா 68 ரன்கள் எடுத்தனர்.
இதையும் படிக்க: யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
இதனையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நெதர்லாந்து அணி களம் கண்டது. அந்த அணியில் விக்ரமஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓதௌத் களமிறங்கினர். மேக்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய காலின் அக்கர்மேன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், நிதானமாக விளையாடிய விக்ரமஜித் சிங் அரைசதம் எடுத்தார். அவர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து வீரர்களில் பாஸ் டி லீட் தவிர யாரும் பெரிய அளவில் ஸ்கோர் எடுக்கவில்லை. சிறப்பாக விளையாடிய பாஸ்-டி-லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் 41 ஓவர்களில் 205 ரன்களுக்கு நெதர்லாந்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், பாகிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பைத் தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்கியது.
பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹாசன் அலி 2 விக்கெட்டுகளையும், ஷகின் அஃப்ரிடி, இப்திகார் அகமது, முகமது நவாஸ் மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.