இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காஸாவில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு சமர்பிப்பதாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்தார்.
உலகக் கோப்பையில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் இலக்கை எட்டி இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் மற்றும் அப்துல்லா சஃபீக் சதம் விளாசி அசத்தினர். உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் துரத்திப் பிடித்த 345 ரன்களே ஒரு அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காஸாவில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு சமர்பிப்பதாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: இந்த வெற்றி காஸாவில் உள்ள எங்களது சகோதர, சகோதரிகளுக்கானது. இந்த வெற்றியை அவர்களுக்கு சமர்பிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த வெற்றியில் அணியில் உள்ள அனைவரது பங்களிப்பும் உள்ளது. குறிப்பாக, அப்துல்லா சஃபீக் மற்றும் ஹாசன் அலி பாகிஸ்தானுக்கு இந்த வெற்றியை மேலும் எளிதாக்கினர். ஹைதராபாத் மக்கள் சிறப்பாக ஆதரவளித்தார்கள் என்றார்.
ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலால் ஹமாஸ் - இஸ்ரேல் இடையே போர் மூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.