ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பதும் நிசங்கா 18 ரன்களிலும், அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் குஷால் மெண்டிஸ் உள்பட 4 பேர் அரைசதம் அடித்து அசத்தினர். சரித் அசலங்கா (97* ரன்கள்), குஷால் மெண்டிஸ் (61 ரன்கள்), சதீரா சமரவிக்கிரம (52 ரன்கள்) மற்றும் ஜனித் லியனாகே (50 ரன்கள்) எடுத்தனர்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஓமர்சாய் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃப்சல்ஹாக் ஃபரூக்கி, நூர் அகமது மற்றும் குவாய்ஸ் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் ஒருநாள் தொடரை இழக்காமலிருக்க இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.