கார் விபத்தில் சிக்கியவுடன் இந்த உலகத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இறந்துவிடுவேன் என நினைத்ததாகவும் இந்திய அணியின் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் பந்த் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்த ரிஷப் பந்த் தற்போது குணமடைந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை அவர் வழிநத்துவார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் ரசிகனாக மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது: பாட் கம்மின்ஸ்
இந்த நிலையில், கார் விபத்தில் சிக்கியவுடன் இந்த உலகத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இறந்துவிடுவேன் என நினைத்ததாகவும் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கார் விபத்தில் சிக்கியபோது முதல் முறையாக இந்த உலகத்தில் எனக்கான நேரம் முடிந்துவிட்டதாக உணர்ந்தேன். விபத்து ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து நான் அறிந்திருந்தேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் பெரிய அளவில் பயப்படும் படியான அளவுக்கு ஒன்றும் ஆகவில்லை. யாரோ ஒருவர் என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயங்களிலிருந்து குணமடைய எவ்வளவு நாள்கள் ஆகும் எனக் கேட்டதற்கு, 16-18 மாதங்கள் ஆகும் என மருத்துவர் கூறிவிட்டார். காயத்திலிருந்து மீண்டு வரும் காலங்கள் கடினமாக இருக்கப்போகிறது எனத் தெரிந்தது என்றார்.