இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக எந்த ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரரையும் பிசிசிஐ அணுகவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
மூன்றாவது முறையாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தொடர ராகுல் டிராவிட் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதேபோல இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக தங்களை அணுகியதாகவும், அதனை தாங்கள் மறுத்துவிட்டதாகவும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களான ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டிங் லாங்கர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக எந்த ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரரையும் பிசிசிஐ அணுகவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜெய் ஷா பேசியதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக நானோ அல்லது பிசிசிஐயோ எந்த ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை. இந்த விஷயம் தொடர்பாக ஊடகங்களில் வலம் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. இந்திய அணிக்கான சரியான பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் நாங்கள் நுணுக்கமாக செயல்பட்டு வருகிறோம். இந்திய கிரிக்கெட்டை ஆழமாக புரிந்து வைத்துள்ள ஒருவரையே பயிற்சியாளராக நியமிக்க நாங்கள் கவனம் கொடுத்து வருகிறோம். உள்ளூர் போட்டிகள் குறித்தும் புதிதாக நியமிக்கப்படவுள்ள பயிற்சியாளருக்கு தெரிந்திருப்பது அவசியம் என்றார்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோகருமான கௌதம் கம்பீர் முதன்மையான போட்டியாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.