வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.
மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.
மகளிருக்கான 8-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, பிகார் மாநிலம் ராஜ்கிரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் கடைசியாக, இந்தியா - மலேசியா அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான இந்தியா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.
இந்தியாவின் தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாத மலேசியாவால், இறுதிவரை கோலடிக்க முடியாமல் போனது. இந்திய தரப்பில் சங்கீதா குமாரி 8-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினார். அதன்பிறகு மலேசியா தடுப்பாட்டம் விளையாட, முதல் பாதியை 1 – 0 முன்னிலையுடனே இந்தியா நிறைவு செய்தது.
2-ஆவது பாதியில் இந்தியா மீண்டும் ஆக்ரோஷம் காட்ட மலேசியா பின்வாங்கியது. 43-ஆவது நிமிஷத்தில் பிரீத்தி துபேவும், 44-ஆவது நிமிஷத்தில் உதிதாவும் ஸ்கோர் செய்தனர்.
இதனால் இந்தியாவின் முன்னிலை 3 - 0 என அதிகரித்தது. ஆட்டம் ஒரு பக்கமாகவே சென்று விட்ட நிலையில், 55-ஆவது நிமிஷத்தில் சங்கீதா குமாரி மீண்டும் ஒரு கோலடித்தார். இதனால் இந்தியா 4 - 0 கோல் கணக்கில் வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது.
இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் தென்கொரியாவை செவ்வாய்க்கிழமை (நவ. 12) சந்திக்கிறது. அதே நாளில், தாய்லாந்து ஜப்பானையும், சீனா - மலேசியாவையும் எதிர்கொள்கின்றன.
இதர ஆட்டங்கள்: இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பான் - தென்கொரியா அணிகள் மோத, அந்த ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. அடுத்த ஆட்டத்தில் சீனா 15 - 0 கோல் கணக்கில் தாய்லாந்தை புரட்டி எடுத்தது.