முதல்வர் கோப்பை போட்டிகள்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசளிப்பு
முதல்வர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார்.
தமிழ்நாடு முதல்வர் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளித்தார்.
சென்னை நேரு விளையாட்டரங்கில் ஜூடோ கல்லூரி மணவியர் போட்டியை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசளித்தார். தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் வீரர், வீராங்கனைகளிடம் குறைகளையும் கேட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மாநில அளவிலான போட்டிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தேன். நிகழாண்டு போட்டிகளுக்கு ரூ. 83 கோடியை ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டார். பரிசுத் தொகையாக மட்டுமே ரூ. 37 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 5 லட்சம் பேர் பதிவு செய்து பங்கேற்ற நிலையில், நிகழாண்டு 12 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெறும் இப்போட்டிகளில் 32,700 பேர் பங்கேற்றுள்ளனர். வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் 3 வேளைகளும் தரமான உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
வரும் 24ஆம் தேதி நிறைவு விழாவில் முதல்வர் பங்கேற்று பரிசளிக்கிறார். இப்போட்டிகளில் இளம் திறனாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே முக்கிய நோக்கமாகும்.
மழையினால் போட்டிகள் பாதிக்க கூடாது. அப்படி பாதிக்கப்பட்டாலும் ஒரு நாள் இரண்டு நாள் அதிகப்படுத்தி விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிப்போம்.
விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடந்த 10 நாள்களாக இங்கே தங்கி இருக்கின்றனர். மழை வந்தாலும் தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு வசதி அனைத்தும் தரமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.