பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கிய மத்திய அரசு!
பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கியது பற்றி...
பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கான பரிசுத் தொகையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வழங்கியது.
தங்கம் வென்றவர்களுக்கு தலா ரூ. 75 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ. 50 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 30 லட்சமும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார்.
29 பதக்கங்கள்
Advertisement
Advertisement
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், மொத்தம் 29 பதக்கங்களை வென்று 18-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
நாடு திரும்பிய அவர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினார்.
இந்த விழாவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பேசிய மன்சுக் மாண்டவியா,
“பாரா விளையாட்டில் நமது நாடு முன்னேற்றம் அடைந்து வருகின்றது. 2016ஆம் ஆண்டில் 4 பதக்கங்களையும், டோக்கியோவில் 19 பதக்கங்களையும் வென்ற நாம், தற்போது 29 பதக்கங்களை வென்றுள்ளோம்.
வருகின்ற 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் பாராலிம்பிக்ஸில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்” எனத் தெரிவித்தார்.
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில், 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களுடன் 18வது இடத்தை இந்தியா பிடித்தது.
இதன்மூலம் பாராலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக 50 இடங்களுக்குள் முன்னேறி இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.