இரண்டு பதக்கங்களை வென்றதால் வாழ்க்கையில் ஒன்றும் மாறவில்லை: மனு பாக்கர்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற பிறகு தனது வாழ்க்கையில் ஒன்றும் மாறவில்லை என மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற பிறகு தனது வாழ்க்கையில் ஒன்றும் மாறவில்லை என மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
வாழ்க்கையில் ஒன்றும் மாறவில்லை
Advertisement
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்று வரலாறு படைத்த மனு பாக்கரிடம் அவரது ரசிகர்கள் தொடர்ச்சியாக பல கேள்விகளை கேட்டு வந்தனர். இரண்டு பதக்கங்களை வென்ற பிறகு, உங்களது வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியையும் ரசிகர்கள் முன்வைத்தனர்.
ரசிகர்களின் இந்த கேள்விக்கு மனு பாக்கர் அவரது எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் பதிலளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற பிறகு எனது வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக் கேட்கும் ரசிகர்களுக்கு, ”ஒன்றும் மாறவில்லை” என்பதை கூறிக் கொள்கிறேன். நான் அதே மனு பாக்கராகவே இருக்கிறேன். பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகான இடைவேளையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன். மீண்டும் நவம்பரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடுவேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.