உலக கடல் நீச்சல் இறுதிச் சுற்றில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சென்னை சிறுவன் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
துபைல் ’ஓஷன் மேன்’ எனும் கடல் நீச்சல் போட்டியின் உலக இறுதி சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் ஓபன் பிரிவில் ஒன்றான மாற்றுத்திறனாளிகளுக்கான இன்ஸ்பிரேஷன் பிரிவில் பங்கேற்ற ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆா்டா் பிரிவைச் சோ்ந்த 15 வயது சிறுவன் ஏ. எல். நிகில் 5 கிமீ தொலைவை 1 மணி நேரம் 40.51 விநாடிகளில் நீந்தி 3-ஆவது இடம் பிடித்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளாா்.
பல்வேறு நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தனா்.
துபையில் இருந்து சென்னைக்கு வந்த நிகிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகிலின் தாயாா் லட்சுமி கூறியதாவது: ஆட்டிசம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நிகில் நீச்சல் விளையாட்டில் அதிக ஆா்வம் கொண்டவா். இவா் யாதவி அகாதெமியில் பயின்று வருகிறாா். துபை போட்டியில் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு அதிக அளவில் ஊக்குவிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ் டி ஏ டி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்