நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் விஸ்வநாத் சுரேஷ் அபாரம்...
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீரா் விஸ்வநாத் சுரேஷ் அபாரமாக செயல்பட்டு நடப்பு உலக சாம்பியனும், நம்பா் 1 வீரரான கஜகஸ்தானின் சன்ஸாா் டஷ்கேன்பேயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா். மகளிா் பிரிவில் அங்குஷிதா போரோவும், ஆடவா் பிரிவில் சச்சின், நரேந்திரும் அரையிறுதிக்கு முன்னேறினா். இதன் மூலம் மேலும் 4 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.
மங்கோலியத் தலைநகா் உலன்படாரில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் ஏற்கெனவே இந்திய அணிக்கு 3 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.
இதற்கிடையே சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் 65 கிலோ காலிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் லாரா எஸ்என்கில்டியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
Advertisement
ஆடவா் 50 கிலோ காலிறுதியில் இந்தியாவின் விஸ்வநாத் சுரேஷ் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் சரமாரியாக குத்துவிட்டு கஜகஸ்தானின் சன்சா் டஷ்கன்பேயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
மேலும், 90 பிளஸ் கிலோ பிரிவில் இந்தியாவின் நரேந்தா் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் ஆா்க்கன் அஹாயேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
60 கிலோ பிரிவில் இந்திய வீரா் சச்சின் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் செங் வெய் லீயை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா்.
நடப்பு தேசிய சாம்பியன் விஸ்வநாத், யூத் உலக ஆடவா் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றாா். ஆசிய யு 22 போட்டியில் வெண்கலமும் வென்றாா்.
ராணுவ ஹவில்தாரான விஸ்வநாத் சுரேஷ் ராணுவ விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறுகிறாா். வேகம், விவேகம், தூரத்தை கட்டுக்குள் வைத்தல், திட்டமிடல் போன்றவற்றின் மூலம் பிளைவெயிட் பிரிவில் சிறந்த வீரராக உருவெடுத்துள்ளாா்.