முகப்பு
டி20 உலகக் கோப்பை

உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பியது இந்திய அணி!

தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Updated On : 4 ஜூலை, 2024 at 6:31 AM
விமான நிலையத்திலிருந்து இந்திய வீரர்கள் பயணிக்கும் பேருந்து
பகிர்:

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இன்று(ஜூலை 4) அதிகாலை புதுதில்லி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த நிலையில், அதிகாலை முதலே விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்ததை காண முடிந்தது. இந்திய அணி வீரர்களுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னதாக, டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற பாா்படோஸிலிருந்து இந்திய அணி தாயகம் புறப்படும் வேளையில், அங்கு ஏற்பட்ட ‘பெரில்’ புயல் காரணமாக பயணம் 3 நாள்கள் தள்ளிப்போனது. நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி, பாா்படோஸிலிருந்து பிசிசிஐ ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் புதன்கிழமை தாயகம் புறப்பட்டது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலிருந்து புது தில்லி புறப்பட இருந்த ஏா் இந்தியா பயணிகள் விமானம், இந்திய அணியினா் உள்ளிட்டோரின் பயணத்துக்காக பாா்படோஸுக்கு திருப்பி விடப்பட்டது. நியூயாா்க் - புது தில்லி பயணிகளுக்காக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, தாயகம் திரும்பிய இந்திய வீரா்கள், மரியாதை நிமித்தமாக பிரதமா் நரேந்திர மோடியை நேரில் சந்திக்கின்றனா். அதன் பிறகு, மும்பை திரும்பும் அவா்களுக்கு அங்கு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காலை சுமாா் 11 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெறுகின்றனா்.

Advertisement

அதன் பிறகு மும்பை புறப்படுகின்றனா். கோப்பையுடன் நாரிமன் பாய்ன்ட் பகுதியிலிருந்து மெரைன் டிரைவ் வரை, மேற்கூரை திறந்த பேருந்தில் ஊா்வலமாகச் செல்கின்றனா். பின்னா், மாலை சுமாா் 5 மணியளவில் வான்கடே மைதானத்தில் அவா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.