டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!
கம்பீர், பும்ராவை தோனி பாராட்டியது பற்றி...
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீரை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
மேலும், இன்ஸ்டாவில் தோனி வெளியிட்ட பதிவில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவை சாம்பியன் பந்துவீச்சாளர் என்று பாராட்டியுள்ளார்.
ஐசிசி டி20 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்திய அணிக்காக உலகக் கோப்பைகள் வென்று கொடுத்த கேப்டன்கள் கபில்தேவ், தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மைதானத்தில் ஒன்றாக அமர்ந்து போட்டியை பார்த்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பகிரப்பட்டது.
தோனி பதிவு
சமூக வலைதளங்களில் முக்கிய தருணங்களில் மட்டுமே பதிவிடும் தோனி, நேற்று இந்திய அணியைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"அகமதாபாத்தில் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. இந்திய அணிக்கும், பணியாளர்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள். நீங்கள் விளையாடுவதைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பயிற்சியாளர் சார், உங்களின் சிரிப்பை பார்க்க அழகாக இருக்கிறது. சிரிப்புடன் இருக்கும் தீவிரம் சிறந்த காம்போ. பும்ராவைப் பற்றி நான் எதுவும் பதிவிடாமல் இருப்பது நல்லது. அவர் ஒரு சாம்பியன் பந்துவீச்சாளர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா, 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.