சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி களமிறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், விராட் கோலியுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பந்த் 20 ரன்களிலும், விராட் கோலி 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் எடுத்து அசத்தினார். அவர் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர் அடங்கும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஹார்திக் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மற்றும் ஃபசல்ஹக் ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நவீன் உல் ஹக் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.