எண்ணெய் நிறுவனங்கள் இழுத்தடிப்பு: 1.3 லட்சம் இலவச கேஸ் இணைப்பு பாக்கி
சென்னை, நவ. 18: தமிழக அரசின் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தின் கீழ், கேஸ் இணைப்புகள் அளிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. கடந்த நிதியாண்டில் வழங்க வேண்டிய இணைப்புகளில் 1.3 லட்சம் பாக்கி உள்ளது. இ
சென்னை, நவ. 18: தமிழக அரசின் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தின் கீழ், கேஸ் இணைப்புகள் அளிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருகிறது. கடந்த நிதியாண்டில் வழங்க வேண்டிய இணைப்புகளில் 1.3 லட்சம் பாக்கி உள்ளது.
இதனால், தமிழக அரசின் இந்தத் திட்டம் முழுமை அடையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம், ஒவ்வொரு நிதியாண்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 - 2009-ம் ஆண்டுக்கு 6 லட்சம் இலவச கேஸ் இணைப்புகளை வழங்க எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன.
தொடர் தட்டுப்பாடு... இந்த நிலையில், தமிழகத்தில் கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
""கேஸ் சிலிண்டர்கள் பதிந்து 15 நாள்களுக்குப் பிறகே சப்ளை செய்யப்படுகிறது. கேஸ் இணைப்புக்கான உபகரணங்கள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களில் கேஸ் சிலிணடர்கள் எப்போது கிடைக்கும் என்ற தகவலை தெளிவாகக் கூற கேஸ் ஏஜென்சிகள் மறுக்கின்றன'' என்கிறார் அண்ணாநகரைச் சேர்ந்த சங்கர்.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, தமிழக அரசின் இலவச கேஸ் இணைப்பையும் வெகுவாக பாதித்துள்ளது.
""கடந்த நிதியாண்டில் 6 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி, 4 லட்சம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கேஸ் இணைப்புக்கான உபகரணங்கள் முழுவதும் அளிக்கப்படுவதில்லை'' என்கின்றனர் உணவுத் துறை அதிகாரிகள்.
பாக்கி எவ்வளவு? இந்தப் பிரச்னையைத் தீர்க்க எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் தமிழக அரசு கடந்த மாதம் ஆலோசனை நடத்தியது. அதில், நவம்பர் 15-ம் தேதிக்குள் மீதமுள்ள கேஸ் இணைப்புகளை வழங்க உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த உறுதி நிறைவேற்றப்படவில்லை.
""மழைக் காலம் என்பதால் கேஸ் சிலிண்டர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், சிலிண்டர்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 6 லட்சம் இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. தட்டுப்பாடு காரணமாக, இந்த நிதியாண்டு வந்த பிறகும் 6 லட்சத்தை எட்ட முடியவில்லை. 1.3 லட்சம் இணைப்புகள் பாக்கி உள்ளன. மேலும், 6 லட்சம் இணைப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.