அரசு பஸ்களுக்கான காப்பீடு பொதுத்துறை நிறுவனத்தில் செய்யப்படுமா?
சென்னை, செப்.18: அரசு பஸ்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால், விபத்து இழப்பீடுக்காக நீண்ட காலமாக காத்திருப்போரும், போக்குவரத்து ஊழியர்களும் நிம்மதியடைந்துள்ளனர். அத
சென்னை, செப்.18: அரசு பஸ்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்ற முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பால், விபத்து இழப்பீடுக்காக நீண்ட காலமாக காத்திருப்போரும், போக்குவரத்து ஊழியர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.
அதேநேரம், பொதுத் துறை காப்பீடு நிறுவனத்தில் இக் காப்பீடு செய்யப்படுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
பஸ்கள் காப்பீடு செய்யப்படாததால் விபத்தில் பாதிக்கப்படும் மூன்றாம் நபருக்கு, போக்குவரத்துக் கழகங்களே நேரடியாக இழப்பீடு வழங்கி வருகின்றன. சில இடங்களில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் நீண்ட காலமாக ஏராளமானோருக்கு இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பஸ்களை ஜப்தி செய்வது தொடர்கதையாகி வருகிறது.
Advertisement
பஸ் விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் நபருக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொகை ரூ.158.15 கோடி தற்போது நிலுவையில் உள்ளது. பஸ்கள் காப்பீடு செய்யப்படாததே இந்த சிக்கலுக்கு காரணம்.
இந்த இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போக்குவரத்துக் கழகங்களும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக, சில பஸ்களை வேறு கோட்டங்களுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சங்கங்கள், கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. தொடர் நெருக்கடி, நஷ்டத்தைத் தொடர்ந்து அரசு பஸ்களுக்கு காப்பீடு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு தலைமை வகித்த முதல்வர் கருணாநிதி இதை அறிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களும் காப்பீடு செய்யப்பட்டிருந்தன. கோடிக்கணக்கில் பிரிமியம் தொகை கட்டப்பட்டது. ஆனால் விபத்து இழப்பீடோ மிகவும் குறைவாக பெறப்பட்டது. இந்த காரணத்தால் அரசு பஸ்களுக்கு காப்பீடு செய்வது ரத்து செய்யப்பட்டது.
ஆனால், தற்போது வேறு வழியின்றி மீண்டும் காப்பீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 20 ஆயிரத்து 104 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 53 இருக்கைகள் கொண்ட ஒரு பஸ்ஸýக்கு, மூன்றாம் நபர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய ரூ. 17 ஆயிரம் வரை பிரிமியம் கட்ட வேண்டி வரும். மொத்தமுள்ள 20,104 பஸ்களுக்கு ஆண்டுக்கு ரூ.34.17 கோடி பிரிமியம் கட்ட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு பெரிய தொகை கட்ட வேண்டியிருப்பதால், ஒப்பந்தங்கள் கோரி குறைந்த பிரிமியம் கோரும் காப்பீடு நிறுவனத்தை அரசு தேர்வு செய்யும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ""தனியார் காப்பீடு நிறுவனத்திடம் முழுமையான இழப்பீடு தொகை பெறுவது கடினம். பயனாளிகள் அலைக்கழிக்கப்படுவர். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயக்கப்படும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 30 பஸ்கள், "தி ஓரியன்டல் காப்பீடு' நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அனைத்து பஸ்களும் பொதுத் துறை காப்பீடு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்படவேண்டும்'' என போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணிகளும் கருத்து தெரிவிக்கின்றனர்.