காலதாமதமாகும் காற்றாலை மின் உற்பத்தி
உடுமலை, ஏப்.28: தென் மேற்கு பருவக்காற்று காலதாமதமாகி வருவதால் காற்றாலை மின் உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மற்றும் காற்றாலை நிறுவனங்களிடையே பெருத்த ஏமாற்றம் நிலவி வருகிறது.
உடுமலை, ஏப்.28: தென் மேற்கு பருவக்காற்று காலதாமதமாகி வருவதால் காற்றாலை மின் உற்பத்தியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மற்றும்
காற்றாலை நிறுவனங்களிடையே பெருத்த ஏமாற்றம் நிலவி வருகிறது.
உடுமலை, பல்லடம், தாராபுரம், பழனி, ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. தமிழக-கேரள எல்லையில் உள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் தென்மேற்குப் பருவக்
காற்றை நம்பியே இந்த காற்றாலைகள் இயங்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுதோறும் ஏப்ரல் 3 வது வாரத்தில் துவங்கி அக்டோபர் மாதம் வரை தொடர்ந்து 6 மாதங்களுக்கு தினசரி சுமார் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வரை இந்த
காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்தின் மின் தேவைகளை பூர்த்தி செய்யப் பயன்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்வெட்டு பிரச்னைகளை சமாளிக்க தமிழக அரசு இந்த காற்றாலை மின் உற்பத்தியையே பெரிய அளவில் எதிர்பார்த்து
வருகிறது.
இந்நிலையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 3 வது வாரம் துவங்கும் தென்மேற்கு பருவக் காற்று துவங்க காலதாமதம் ஆவதால், தமிழக அரசும் காற்றாலை நிறுவனங்களும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்து வருகின்றன.
இந்த கோடை வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதும் குறிப்பாக தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தை கொடுக்க முடியாமல் அரசு திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழக அரசு எதிர்நோக்கி உள்ளது.
இது குறித்து உடுமலை காற்றாலை மின் சக்தி மேம்பாட்டு வட்ட உயர் அதிகாரிகள் கூறியது:
உடுமலை மின் சக்தி மேம்பாட்டு வட்டத்தின் கீழ் சுமார் 4 ஆயிரத்து 100
காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நல்ல
காற்றடிக்கும் சீசனில் தினமும் 1800 முதல் 2000 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்திசெய்யப்படுகின்றன.
மேலும் தென் மாவட்டமான கயத்தாறை மையமாக வைத்து சுமார் 6 ஆயிரம்
காற்றாலைகள் இயங்கி வருகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் துவங்கி அக்டோபர் மாதம் வரை காற்றாலைகளுக்கு நல்ல சீசன்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடியும் தருவாயிலும் இன்னமும் தென்மேற்கு பருவக் காற்று முழுமையாகத் துவங்கவில்லை. இயற்கையின் மாற்றங்கள் குறித்து உறுதியாக எதுவும் கூறமுடியாத நிலையே நிலவுகிறது.
தற்போது உடுமலை மற்றும் கயத்தாறு காற்றாலை மின் சக்தி மேம்பாட்டின் கீழ் இயங்கி வரும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காற்றாலைகளும் முழு உற்பத்தியை எதிர்பார்த்து நிற்கின்றன. முழு உற்பத்தி துவங்கினால் மின்தடையை ரத்து செய்யலாம் என தமிழக அரசும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. தமிழக அரசும்,
காற்றாலை நிறுவனங்களும் தென்மேற்கு பருவக் காற்றையே பெரிய அளவில்
நம்பியுள்ளது என்றனர்.