தென்னை காப்பீட்டுத் திட்டத்தில் தவிர்க்கப்பட்ட திருப்பூர் மாவட்டம்!
உடுமலை : தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் மட்டும் சேர்க்கப்படாமல் போனது விவசாயிகளிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் சுமார் 5
உடுமலை : தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் மட்டும் சேர்க்கப்படாமல் போனது விவசாயிகளிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டங்களில் சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. பல்லடம், தாராபுரம், காங்கயம், ஊத்துக்குளி, திருப்பூர், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளையும் சேர்த்து திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1 கோடி தென்னை மரங்கள் உள்ளன.
தமிழகத்திலேயே தென்னை மரங்கள் நிறைந்த பகுதியாக கோவை மாவட்டம் முதல் இடத்திலும், 2வது இடத்தில் திருப்பூர் மாவட்டமும் உள்ளன. தென்னை சார்ந்த ஏராளமான உப தொழில்களும் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்ற பயிர்களுக்கு உள்ளது போல் தென்னை மரங்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்த வேண்டும் என தென்னை விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் இணைந்து தென்னை மரங்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை கடந்த ஏப்ரல் 1ம் தேதி அறிமுகப்படுத்தின.
இதன்படி தென்னந்தோப்புகள் வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், எதிர்பாராத தீ விபத்து, நில அதிர்வு, ஆழிப்பேரலை போன்ற இயங்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டால் தென்னை மரங்களுக்கு இக் காப்பீட்டுத் திட்டத்தின்படி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் தென்னை வாரியமும், தமிழக அரசும் இணைந்து தமிழ்நாட்டில் கோவை, தஞ்சை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 10 மாவட்டங்களில் தென்னை விவசாயிகளுக்கு 2010-11ம் ஆண்டிற்கு 2.62 கோடி ஒதுக்கீடு செய்து இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.
குட்டை, நெட்டை, ஒட்டுரகம் உள்ளிட்ட அனைத்து ரக தென்னை மரங்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக 4 வயது முதல் 15 வயது வரை உள்ள ஒரு மரத்திற்கு பிரிமியமாக 1.17 செலுத்தினால் போதும் இழப்பீடாக 600 கிடைக்கும், இதேபோல் 16 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒரு மரத்திற்கு 1.58 பிரிமியம் செலுத்தினால் போதும் 1,150 இழப்பீடாக கிடைக்கும். ஒரு விவசாயி குறைந்தபட்சம் 10 மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் இதில் உள்ளது. மேற்கொண்டு இதனுடன் பிரிமியத் தொகையில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் 50 சத விகிதத்தையும், மாநில அரசு 25 சதவிகிதத்தையும் விவசாயிகளுக்காக செலுத்தி விடுகின்றன. ஆண்டுதோறும் அந்தந்த கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியிலேயே பிரிமியத்தை செலுத்தி விடலாம் என்ற சாதாரண நடைமுறைகளை கொண்டு இந்த காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் சேர்க்கப்படாத செய்தி தற்போது தென்னை விவசாயிகளிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள சுமார் 75 லட்சம் தென்னை மரங்கள் விடுபட்டுப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தென்னை விவசாயிகள் கூறியது: தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகத்தில் அமலாக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இந்த கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தன. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தோம்.
இந்த திட்டத்தின்படி உடுமலை வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை அலுவலகங்களுக்குச் சென்று தென்னை மரங்களை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மனு கொடுத்தபோது காப்பீட்டுத் திட்டம் திருப்பூர் மாவட்டத்திற்கு பொருந்தாது என அதிகாரிகள் கூறினர். காரணம் கேட்டபோது திருப்பூர் மாவட்டம் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை எனக் கூறுகின்றனர். இந்த மாவட்டம் மட்டும் எப்படி விடுபட்டு போனது என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.