நெல் கொள்முதல் இலக்கு எட்டப்படுமா?
திருவாரூர், பிப். 17: காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால், நிகழாண்டில் அரசு நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் இலக்கு எட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சை, திருவார
திருவாரூர், பிப். 17: காவிரி டெல்டா மாவட்டங்களில் தனியார் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளதால், நிகழாண்டில் அரசு நிர்ணயித்துள்ள நெல் கொள்முதல் இலக்கு எட்டப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் 1,36,000 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 1,45,940 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 1,31,000 ஹெக்டேரும் என மொத்தம் 4,12,940 ஹெக்டேரில் சம்பா, தாளடி நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதில் இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 54,000 ஹெக்டேரும், திருவாரூர் மாவட்டத்தில் 1,18,000 ஹெக்டேரும், நாகை மாவட்டத்தில் 92,000 ஹெக்டேரும் அறுவடைப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
Advertisement
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஹெக்டேருக்கு 6,500 கிலோவும், திருவாரூர் மாவட்டத்தில் 7,370 கிலோவும், நாகை மாவட்டத்தில் ஹெக்டேருக்கு 9,648 கிலோவும் மகசூல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 1,200-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இங்கு நெல் பொது ரகம் குவிண்டால் ஒன்று ரூ.1,050-க்கும், சன்ன ரகம் குவிண்டால் ஒன்று ரூ.1,100-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. நிகழாண்டில் தமிழகம் முழுவதும் 16 லட்சம் டன்னும், இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 13 லட்சம் டன்னும் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தனியார் வியாபாரிகளை நாடக் காரணம்: நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்தாதது, தூற்றித் தர வேண்டுமென கட்டாயப்படுத்துவது, குவிண்டாலுக்கு ரூ. 25 முதல் ரூ. 40 வரை கையூட்டு கேட்பது, நெல்லை வயலிலிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்வதில் உள்ள வண்டிச் செலவு, ஆள் கூலி மற்றும், அங்கு கொள்முதல் செய்யும் வரை காத்திருப்பது உள்ளிட்டவற்றால் ஏற்படும் காலதாமதம் ஆகியவற்றால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய விரும்பாமல், தனியாரிடம் விற்பனை செய்யும் நிலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளைத் தடுத்து, கட்டுப்படியான விலை அளித்து விவசாயிகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டால் மட்டுமே இனி வரும் காலங்களில் அரசு தனது கொள்முதல் இலக்கை எட்ட முடியும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு விரிவுபடுத்த வேண்டும் என்கிறார் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி ப. கல்யாணம்.
மேலும், நிகழாண்டில் டெல்டா மாவட்டங்களில் சன்ன ரக நெல் ரகங்களான பாப்பட்லா, ஆடுதுறை 39, கோ 43, கே.ஆர்.எச்.2 உள்ளிட்ட ரகங்களை ஏறத்தாழ 30 சதவீதத்துக்கு மேல் விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். இந்த ரக அரிசி வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், வியாபாரிகளும் அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ. 200 வரை கூடுதலாக அளிக்கின்றனர். தனியார் வியாபாரிகள் விவசாயிகளின் வயல்களுக்கே சென்று கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாகவும் அரசு தனது கொள்முதல் இலக்கை எட்ட இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அரசு தனது கொள்முதல் இலக்கை எட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய முறைகேடுகளை முழுமையாகக் களைய வேண்டும். தட்ப வெட்ப நிலை மற்றும் இயற்கைச் சூழ்நிலைகள் ஆகியவற்றைப் பொருத்து விலை நிர்ணயம், கட்டுப்பாடு, ஊக்கத் தொகை ஆகியவற்றை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.