நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது எப்போது?
சென்னை, ஜன. 23: சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வரும் சென்னை மாநகராட்சி, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. சென்னை சேம
சென்னை, ஜன. 23: சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டி வரும் சென்னை மாநகராட்சி, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டுவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
சென்னை சேமியர்ஸ் சாலையில் செயல்பட்டு வந்த தனியார் பல்பொருள் அங்காடி, சாலையில் இரண்டரை அடி அளவுக்கு ஆக்கிரமித்து சிமென்ட் கூரை கட்டியிருந்தது. இதுபோல் தியாகராயநகர், உஸ்மான் சாலையில் அமைந்திருக்கும் பெரிய துணிக் கடைகள், சாலையை ஆக்கிரமித்து விளம்பரப் பலகைகளை வைத்திருந்தனர். இந்த இரண்டு ஆக்கிரமிப்புகளையும் மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அதிரடியாக அகற்றினர்.
இதுபோல், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் உள்ள நடைபாதைகளில் இடம்பெற்றிருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் எப்போது அகற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பாதசாரிகளிடையே எழுந்துள்ளது.
Advertisement
சென்னையில் உள்ள 2,847 கி.மீ. நீள சாலையில், 500 கி.மீ. தூரத்துக்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடைபாதையில் 150 கி.மீ. தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஓரளவு ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றியபோதும், இந்தப் பணி இப்போது நடைபெறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ராயப்பேட்டை பாரதியார் சாலை, மயிலாப்பூர், பாரிமுனை, பூக்கடை, புதுப்பேட்டை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளில் அமைந்துள்ள நடைபாதைகளில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் உள்ளன. பைகிராப்ட்ஸ் சாலையில் அமைந்துள்ள குஷ்ஷன் மெத்தை விற்பனை கடைகள், இப்போது சாலையையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டன.
வளசரவாக்கம் ஆர்க்காடு சாலையில் நடைபாதை வரை சிற்றுண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலைகளில் நடக்கும் பாதசாரிகள், ஆக்கிரமிப்பு காரணமாக சாலையில் இறங்கி நடக்கும் நிலை உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தீவிரம் காட்டும் மாநகராட்சி, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் அக்கரை காட்ட வேண்டும். நடவடிக்கை மேற்கொண்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் தொடர் நடவடிக்கையை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.