நந்தி ஆற்றின் குறுக்கே மந்த நிலையில் மேம்பால கட்டுமானப் பணி
திருத்தணி, ஜன. 29: திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே உயர்நிலை மேம்பாலம் கட்டும் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருத்தணி- திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் கா
திருத்தணி, ஜன. 29: திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே உயர்நிலை மேம்பாலம் கட்டும் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி- திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் காசிநாதபுரம் அருகே செல்லும் நந்தி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் குறுகிய அளவில் இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும், மழை காலத்தில் தரைப் பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது போக்குவரத்தும் தடைப்பட்டது. ÷இதையடுத்து, இங்கு உயர்நிலை மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கியது. பிறகு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தாற்காலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. மே மாதத்தில் இருந்து பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன.
இப் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது திருத்தணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், நாகலாபுரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் திருப்பதி புறவழிச் சாலை வழியாக 2 கி.மீ. சுற்றி வருகின்றனர். இந்த தொலைவைத் தவிர்க்கும் பொருட்டு, உயர்நிலை மேம்பாலம் அருகேயுள்ள சிறிய பாதையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி செல்லும் போது தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இந்த பாலத்தை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை கால அவகாசம் அளித்துள்ளது. தற்போது 10 மாதங்கள் ஆகியும், கட்டுமானப் பணிகள் மந்த நிலையிலேயே உள்ளன. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, இப் பணிகளை விரைவாக செய்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பு.