போக்குவரத்துக்கு லாயக்கற்ற சிதம்பரம் சாலைகள்
சிதம்பரம், ஏப். 30: சிதம்பரம் நகரில் நகராட்சி பராமரிப்பில் உள்ள அனைத்து சாலைகளும் மிகமோசமான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. சென்னை - கும்பகோணம் சாலையில் அணைக்கரை அருகே கீழணை பாலத்த
சிதம்பரம், ஏப். 30: சிதம்பரம் நகரில் நகராட்சி பராமரிப்பில் உள்ள அனைத்து சாலைகளும் மிகமோசமான நிலையில் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
சென்னை - கும்பகோணம் சாலையில் அணைக்கரை அருகே கீழணை பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் கும்பகோணம் செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சிதம்பரம் வழியாக இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிதம்பரம் போல்நாராயணன்தெரு வழியாக வெளியேறுகின்றன.
÷நகர்மன்றம் பொறுப்பேற்றபோது போல்நாராயணன் தெரு சாலை மிகமோசமான நிலையில் இருந்தது. அச் சாலையை சீரமைக்க கடந்த மூன்றரை ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஓராண்டு முன் மாவட்ட ஆட்சியர் பொதுநிதியிலிருந்து நிதி பெறப்பட்டு ரூ.12 லட்சம் செலவில் அச்சாலையை உயர்த்தி அகலமாக பிளேவர் மிஷின் மூலம் தார்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.
÷டெண்டர் விடப்பட்டு சுமார் 6 மாதங்கள் ஆகியும் பணி தொடராமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த பின்னர் சாலை அமைக்கும் முதல் கட்டப்பணி தொடங்கிய பின்னர் இருமுறை ஒன்றரை ஜல்லி மற்றும் செம்மண் போடப்பட்டது. இந்த செம்மண் சாலை போடப்பட்டு 3 மாதங்களாகியும் பிளேவர் மிஷின் மூலம் தார்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் பஸ்கள், கனரக வாகனங்கள் செல்லமுடியவில்லை. வாகனங்கள் செல்லும்போது அப்பகுதியில் செம்மண் பரவி வீடுகள் மற்றும் கடைகளில் புகுந்து செம்மண் படிந்த தெருவாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து நகர்மன்றத் தலைவரையும், நகராட்சி அதிகாரியையும் கேட்டபோது, நாங்கள் டெண்டர் விட்டு விட்டோம். அச்சாலை அமைக்கும் பணியை எடுத்த ஒப்பந்தக்காரருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தனர். ஆனாலும் அங்கு தார்சாலை அமைக்கப்படாததால் அச்சாலை சாபக்கேடான சாலை என்ற பெயரை பெற்றுள்ளது.
÷சிதம்பரம் நகரில் இச்சாலை மட்டுமல்ல அனந்தீஸ்வரன் கோவில் தெரு, ஆனிக்காரன் தெரு, கமலீஸ்வரன் கோவில் தெரு, தேரடி பிள்ளையார்கோவில் தெரு, கோவிந்தசாமி தெரு, காசிமட சந்து, 16கால் மண்டப தெரு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் மிகமோசமான நிலையில் உள்ளன.
சாலைகளை சீரமைக்க நகராட்சி தரப்பில் எவ்வித முனைப்பான நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் இப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டுமென சிதம்பரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.