முகப்பு
தமிழ்நாடு

முறையான அனுமதியின்றி வீட்டு மனைகளாகும் விளைநிலங்கள்!

மதுரை : மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் முறையான அனுமதியின்றி விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதால், விவசாயப் பகுதி சுருங்கி வருவதுடன், ஊராட்சிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:58 PM
பகிர்:

மதுரை : மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் முறையான அனுமதியின்றி விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதால், விவசாயப் பகுதி சுருங்கி வருவதுடன், ஊராட்சிகளுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.

 அதிகரித்து வரும் மக்கள்தொகையால் குடியிருப்புக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. வசதி படைத்தவர்களுக்கு வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய பிரச்னை இல்லையென்ற போதிலும், நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு அது ஒரு வாழ்க்கை லட்சியமாகவே உள்ளது.

 இதனால், கடனுக்கு சிறிய இடத்தையாவது வாங்கி வீடு கட்டவே நடுத்தர மக்கள் பலரும் விரும்புகின்றனர். இதைப் பயன்படுத்தும் வகையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆங்காங்கே புற்றீசல் போல முளைத்து வருகின்றன.

 அதுவும், நான்கு வழிச்சாலைத் திட்டம் வந்த பிறகு மதுரை- திண்டுக்கல்- விருதுநகர் சாலை வழித்தடத்திலும், மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலை வழித்தடத்திலும், சாலையின் இருமருங்கிலும் உள்ள விளைநிலங்கள் பல வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன.

 ஊரக வளர்ச்சித் துறையால் 18.08.1997-ல் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண்: 255-ன்படி ஊராட்சிகளில் மனைப்பிரிவு அங்கீகாரத்தை நகர் ஊரமைப்புத் துறையினர் வழங்கும் முன்னர் ஊராட்சி மன்ற அனுமதி பெறப்பட வேண்டும்.

 தமிழ்நாடு அரசிதழ் எண்: 34 (தனித்துவம்) 5..2.2009-ன்படி பத்திரப் பதிவுச் சட்டம் 1908, பிரிவு 22 ஏ-யின் கீழ் பதிவுசெய்ய மறுக்க தகுதி உள்ளவை எனும் தலைப்பில் பத்தி 2.2-ல், சொந்த நிலங்களை மனைப் பிரிவுகளாகப் பிரிக்கும் இனங்களில் சம்பந்தப்பட்ட நிலங்களின் வளர்ச்சி குறித்து நகர் ஊரமைப்புத் துறையினர் அனுமதி வழங்காத பட்சத்தில் அத்தகைய மனைப் பிரிவுகளைப் பதிவுசெய்ய மறுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் இத்தகைய விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்பட்டு வீட்டு மனைகள் பதிவு செய்யப்படுகிறதா? என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 காளான்கள் போல் முளைத்து வரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பல, கிராமங்களில் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, மண்ணைச் சமப்படுத்தி, கற்களை ஊன்றி வீட்டடிமனைகளாகப் பிரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மதுரை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ஊராட்சிப் பகுதியில் விளைநிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி, முறையான அனுமதி பெறாமலேயே பலரும் இதுபோன்று பிளாட் போட்டு விற்று வருகின்றனர். இதனால், ஊராட்சிக்கு வர வேண்டிய கட்டண வருவாய் கிடைக்காமல் போய் விடுவதுடன், பிளாட்டுகளை வாங்கியவர்கள் மனைகளுக்கான வரைபட அனுமதி கேட்டு ஊராட்சி அலுவலகத்தை அணுகும்போது தர முடியாத நிலையும் ஏற்படுகிறது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிஜி தாமஸ் வைத்யன் இருந்தபோது இதுபோன்ற புகார் வந்ததன்பேரில் பத்திரப் பதிவுத்துறை மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ஊராட்சி நிர்வாகத்தின் தடையின்மைச் சான்றும், நகர் ஊரமைப்புத் துறையின் அனுமதியும் பெற்ற மனைப் பிரிவுகளை மட்டுமே பத்திரப் பதிவு செய்ய சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் கேட்டபோது, முறையான அனுமதியின்றி விளைநிலங்களை வீட்டு மனைகளாக்குவது தொடர்பான புகார்கள் வந்துள்ளன. எல்.டி.ஏ. விதிகளின்படி இல்லாத மனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளூர் குழுமத் திட்டத்தின் உறுப்பினர்-செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் ஏற்படுத்த உள்ளூர் குழுமத் திட்ட அலுவலர்கள், மாவட்ட பத்திரப் பதிவுத் துறை அலுவலர்களுக்கான கூட்டமும் விரைவில் நடத்தப்பட உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.