மருத்துவமனைகளில் தீயணைப்புத்துறை ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க டி.ஜி.பி. உத்தரவு
சென்னை, டிச.19: கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஒரு வாரத்தில் ஆய்வு செய்து அற
சென்னை, டிச.19: கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து ஒரு வாரத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. போலோநாத் உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா தனியார் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 90 பேர் இறந்த சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஜூலை மாதம் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தீயணைப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதில், 80 சதவீதத்துக்கு அதிகமான மருத்துவமனைகள் எவ்வித பாதுகாப்பு வசதியும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
Advertisement
முக்கியமாக அனைத்து மருத்துவமனைகளிலும் மின் இணைப்புகள் பழுதடைந்தும்,சிதிலமடைந்தும் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.
சென்னையில் உள்ள 50 பெரிய மருத்துவமனைகளில் 40 மருத்துவமனைகள் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த மருத்துவமனைகளில் நீர் தெளிப்பான், எச்சரிக்கைக் கருவி உள்ளிட்ட தீயணைப்புக் கருவிகள், நோயாளிகள் தப்புவதற்கு வெளியேறும் வழிகள், சாய்வுத் தளங்கள் இல்லை.
மேலும் பெரும்பாலான மருத்துவமனைகளின் கீழ் பகுதியில் ஹோட்டல்கள், அலுவலகங்கள்,கிட்டங்கிகள் ஆகியவை இருப்பதால் எளிதில் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.
இதேபோன்ற நிலைமைதான் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இருப்பதாக தீயணைப்புத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒரு வாரத்தில் ஆய்வு: இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், தமிழக தீயணைப்புத்துறை இயக்குநர் டி.ஜி.பி. போலோநாத் மாநிலத்தில் உள்ள தீயணைப்பு துணை இயக்குநர், கோட்ட அலுவலர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரியோடு இணைந்துள்ள மருத்துவமனைகள், உயர் சிறப்பு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது, தேசிய கட்டுமான விதிமுறைகளின்படி மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யுமாறு குறிப்பிடப்பட்டுóள்ளது. இந்தச் சுற்றறிக்கை கடந்த 10-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை ஒரு வாரத்துக்குள் முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆய்வின் முடிவில் கிடைக்கும் தகவல்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தீயணைப்புத்துறை அதிகாரிகள், தங்களது பகுதிக்கு உள்பட்ட மருத்துவமனைகளில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாக தீயணைப்புத்துறையைச் சேர்ந்த மற்றொரு உயர் அதிகாரி தெரிவிக்கிறார். குறிப்பாக மருத்துவமனைகளில் மின்கசிவு இல்லாமல் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலம் மருத்துவமனைகளில் இருக்கும் பாதுகாப்பு வசதிகள் தெரிய வருவதோடு, பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் மருத்துவமனைகளில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அறிவுறுத்தவும் முடியும் என தீயணைப்புத்துறை உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.