முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்பு தேடும் அரசுப் பள்ளி

கரூர் : காவல் துறையின் ஆக்கிரமிப்பால், பாதுகாப்புத் தேடும் நிலையில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது.  கரூர் அருகேயுள்ள வெங்கமேடு வாங்கல்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:24 PM
பகிர்:

கரூர் : காவல் துறையின் ஆக்கிரமிப்பால், பாதுகாப்புத் தேடும் நிலையில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

 கரூர் அருகேயுள்ள வெங்கமேடு வாங்கல்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

 இந்தப் பள்ளிக்கு எதிரில் வெங்கமேடு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காவல் நிலையத்தினாலேயே இந்தப் பள்ளிக்கு தற்போது இடையூறு ஏற்பட்டுள்ளது.

 சாலையோரத்தில் நீள வாக்கில் அமைந்துள்ள இந்தப் பள்ளிக்கு 3 வாசல்கள் உள்ளன. இவற்றில் ஒரு பக்க வாசலுக்கு மட்டுமே இரும்புக் கம்பி கொண்ட பெரிய அளவிலான கதவு அமைக்கப்பட்டுள்ளது. மற்ற 2 வாசல்களும் திறந்த நிலையிலேயே உள்ளன.

 இதனால், அந்தப் பகுதியிலுள்ள சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் மது அருந்துவது, சீட்டாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மது அருந்தப் பயன்படுத்திய இதர பொருள்களை அங்கேயே வீசிவிட்டுச் செல்வது, பள்ளிக் கழிப்பறையைப் பயன்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

 இதனால், பள்ளி மாணவர்கள் காலையில் பள்ளிக்கு வந்ததும் சமூக விரோதிகள் மிச்சம் வைத்துவிட்டுப் போன பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பின்னரே, கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது.

 இது ஒருபுறம் என்றால், வெங்கமேடு காவல் நிலையத்தில் பணியாற்றுவோரின் தொல்லைகள் மறுபுறம். வாகன சோதனையில் ஈடுபடும் காவல் துறையினர் உரிய ஆவணங்கள் இன்றிச் சிக்கும் லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்களை பள்ளியின் வளாகத்துக்குள்ளேயே நிறுத்துகிறார்கள். ஏற்கெனவே மிகக் குறுகிய இடத்தில் செயல்படும் பள்ளி இத்தகைய வாகனங்களின் ஆக்கிரமிப்பால் அதிகமான இடநெருக்கடிக்கு உள்ளாகிறது.

 மேலும், பள்ளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் மாணவர்கள் ஏறி விளையாடுவதால், அவர்களுக்கு அடிக்கடி காயமும் ஏற்படுகிறது.

 இதுகுறித்து காவல் நிலையத்தில் தெரிவித்தால், ""பள்ளியே எங்கள் காவலில்தான் இருக்கிறது'' என்று அதிகாரிகள் பதிலளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 மேலும், விபத்தில் சிக்கும் வாகனங்கள் போன்றவையும் பள்ளி வளாகத்துக்குள் நிறுத்தப்படுவதால், வாகனங்களைப் பார்க்க வருவோரும், காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வருவோரும் (போதிய இட வசதி இல்லாததால்) பள்ளி வளாகத்தைப் பயன்படுத்து

 கின்றனர்.

 பகல் நேரங்களில் பள்ளி வளாகத்திலேயே இவர்கள் உணவருந்துவதுடன் அங்குள்ள வசதிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது பள்ளிக்கே உரிய பாதுகாப்பான சூழலைக் கேள்விக்குறியாக்குகிறது.

 எனவே, இந்தப் பள்ளியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்டக் காவல் துறை நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவ, மாணவிகளும் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →