கோபி, ஜன. 18: சுதந்திரப் போராட்டத் தியாகி லட்சுமண ஐயர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோபியில் கடைகள், வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டன.
கோபியைச் சேர்ந்த தியாகி லட்சுமண ஐயர், உடல்நலக்குறைவால் கடந்த 2-ம் தேதி இறந்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கோபியில் கடைகள், தொழில், வணிக நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டன.
கோபி சீதா திருமண மண்டபத்தில் துவங்கிய மெளன ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, வைர விழா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் முடிந்தது. இதில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்தினர், மருத்துவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கோவை எம்.பி. நடராஜன், எம்எல்ஏ-க்கள் விடியல்சேகர், ஆர்.எம்.பழனிச்சாமி, மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், காந்தி கிராம கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன், முன்னாள் எம்எல்ஏ ரமணீதரன், நகராட்சித் தலைவர் ரேவதிதேவி உள்ளிட்டோர் பேசினார்.
தியாகி லட்சுமண ஐயருக்கு, கோபி நகரின் மையப் பகுதியில் சிலை வைப்பது. கச்சேரி மேடு சாலைக்கு தியாகி லட்சுமணன் சாலை எனப் பெயரிடுவது, சமூக சேவையாளர்களுக்கு ஆண்டுதோறும் லட்சுண ஐயர் பெயரில் விருது வழங்குவது, அவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியைத் தொடர்ந்து நடத்த, வணிகர்கள், மக்களிடம் நிதி திரட்டுவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிலை அமைப்பதற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.