முகப்பு
தமிழ்நாடு

பயன்பாடற்றுக் கிடக்கும் கிராமப்புற நூலகங்கள்!

ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 4: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட நூலகங்கள் திறக்கப்படாததால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் வீணாக

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:04 PM
பகிர்:

ஸ்ரீபெரும்புதூர், ஜூலை 4: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட நூலகங்கள் திறக்கப்படாததால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடங்கள் வீணாகி வருகின்றன. எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 கிராமங்களில் அடிப்படை வசதிகளை அதிகரித்துக் கொள்ளும் வகையில் கடந்த ஆட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் சிமென்ட் சாலை அமைத்தல், குடிநீர் குளம் தூர்வாருதல், சுடுகாடு சுற்றுசுவர் அமைத்து மின் விளக்குகள் பொருத்துதல், தெரு விளக்குகள் அமைத்தல் மற்றும் கிராமங்களில் நூலகங்கள் அமைத்தல் ஆகிய பணிகளுக்காக கிராமங்களுக்கு தலா ரூ. 20 லட்சம் மற்றும் விருப்ப நிதியாக ரூ. 5 லட்சம் என அரசு வழங்கியது.

 இந்நிலையில் இந்தத் திட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 58 பஞ்சாயத்துகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் படிப்படியாக நடைமுறை படுத்தப்பட்டது. அதன் மூலம் கிராமங்களில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. சுடுகாடு சுற்றுசுவர் அமைத்து தெருவிளக்குகளும் அமைக்கப்பட்டன. அதே போல் ஒவ்வொறு கிராமத்திலும் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டன.

 இந்த நூலகக் கட்டடங்கள் கட்டப்பட்டதோடு சரி அவற்றுக்கு முழுமையாக அரசு புத்தகங்களை வழங்காததாலும், ஊராட்சி நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுத்து நூலகங்களை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்காததாலும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட ஒரு சில கிராமங்களை தவிர பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நூலகங்கள் தற்போது திறக்கப்படாமல் பயனற்று கிடக்கின்றன. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகங்களிடம் கேட்டதற்கு, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நூலகக் கட்டடங்கள் மட்டுமே கட்டப்பட்டன. நூலகங்களுக்கு போதுமான புத்தகங்களை வழங்கவில்லை என்று கூறினர்.

 இது தவிர நூலகங்களுக்கு நூலகர் நியமனத்தை ஊராட்சி நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது ஊராட்சியில் நிதியே இல்லாதபோது நூலகர்களுக்கு தங்களால் எவ்வாறு சம்பளம் தர முடியும் என கேள்வி எழுப்புகின்றனர்.

 எனவே கிராமங்களில் பொதுமக்கள் பயன்பெற கட்டப்பட்ட நூலகங்கள் பயனற்று உள்ளன. இதனால் அந்த நூலகங்களுக்கு போதுமான புத்தகங்கள் வழங்கவும், அவற்றை பராமரிப்பதற்கு நூலகர்களை அரசு உடனடியாக நியமனம் செய்ய முன் வரவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →