சென்னை, ஜூன் 4: "ராஜீவ் ஆவாஸ் யோஜனா' என்ற மத்திய அரசின் திட்டம் மூலம் நாடெங்கும் உள்ள 32 லட்சம் குடிசைவாசிகளுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய சூரிய ஆற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது 2022 ஆம் ஆண்டுக்குள் ஆண்டு தோறும் 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் ஆற்றலை நாடு பெறும். மின்சார உற்பத்தி கூடுதலாவதுடன் அனைத்துத் துறைகளின் உற்பத்தித் திறனும் பெருகும்.
"ராஜீவ் ஆவாஸ் யோஜனா' திட்டம் மூலம் நாடெங்கும் 250 நகரங்களில் உள்ள 32 லட்சம் குடிசைவாசிகளுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெறும்.
மலைவாழ் பழங்குடி மாணவர்கள் உதவித் தொகை பெற பெற்றோரின் வருமான உச்சவரம்பை ரூ.1.45 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சத்திற்கு மத்திய அரசு உயர்த்தியதாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியலில் மேலும் சில சாதியினரைச் சேர்க்க மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதலாலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநில மக்கள் வெகுவாக பயனடைவர்.
இவ்வாறு சிறந்த தொலைநோக்குப் பார்வையோடு மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வரும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.