முகப்பு
தமிழ்நாடு

மார்ச் முதல் புதிய மின் கட்டணம்?

சென்னை, நவ.24: தமிழகத்தில் புதிய மின் கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழக மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதைத் தொடர்ந்து, அதை சரிசெய்யும் வகையில் மின் கட்டணத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 5:05 AM
பகிர்:

சென்னை, நவ.24: தமிழகத்தில் புதிய மின் கட்டணம் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தமிழக மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கி வருவதைத் தொடர்ந்து, அதை சரிசெய்யும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியின்போது ஒருசில வர்த்தகப் பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இப்போது துறையின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டபோதும், அது கிடைக்கவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement

 இதுபோன்ற காரணங்களால், தமிழ்நாடு மின்வாரியம் ரூ. 41 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

 இந்த நஷ்டத்தை ஓரளவு சரிசெய்ய தமிழக அரசு இப்போது முடிவு செய்துள்ளது. இதற்காக மின் கட்டண உயர்வு கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், தமிழ்நாடு மின்சார வாரியம் மனு செய்துள்ளது.

 உயர்த்தப்பட வேண்டிய மின் கட்டணத்துக்கான திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளது.

 இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தனது ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஆலோசனையின் முடிவில் புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படுவதோடு, அந்த புதிய கட்டண அறிக்கையை எப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைப்பது என்பது குறித்தும் இறுதி செய்யப்படும்.

 தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள பரிந்துரையின்படி, குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயரும் எனத் தெரிகிறது.

 இந்த கட்டண உயர்வு மூலம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ. 8,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கின்றன மின்வாரிய வட்டாரங்கள்.

 இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் எஸ். கபிலன் கூறியது:

 தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கான பரிந்துரையை தமிழ்நாடு மின்சார வாரியம் சமர்ப்பித்துள்ளது. அது சட்ட ஆலோசனை பெறுவதற்காக இப்போது அனுப்பப்பட்டுள்ளது.

 வெள்ளிக்கிழமை முதல் இதுகுறித்த ஆலோசனை மேற்கொள்ளப்படும். ஆலோசனையின் முடிவில் உத்தேசக் கட்டண உயர்வு முடிவு செய்யப்படும். அதோடு பொதுமக்களின் பார்வைக்கு அந்த உத்தேச புதிய கட்டணப்பட்டியல் வைக்கும் தேதியும் முடிவு செய்யப்படும்.

 பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் மூலம் இந்த உத்தேசக் கட்டணம் வெளியிடப்படும். பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படும்.

 இந்தப் புதிய மின் கட்டணம் மூன்று மாதங்களில் அமலுக்கு வரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.