முகப்பு
தமிழ்நாடு

கடும் மின்வெட்டு இலக்கை எட்ட முடியாத பெல் துணை ஒப்பந்த நிறுவனங்கள்

திருச்சி : தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக திருச்சி பெல் துணை ஒப்பந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி இலக்கை எட்ட இயலாத நிலையில் உள்ளன.  திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்திய

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:15 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:28 PM

திருச்சி : தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக திருச்சி பெல் துணை ஒப்பந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தி இலக்கை எட்ட இயலாத நிலையில் உள்ளன.

 திருச்சியில் உள்ள பாரத மிகுமின் நிறுவனம் (பெல்) இந்திய அளவில் அனல் மின் உற்பத்திக்கான கொதிகலன்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

 பெல் நிறுவனத்திலிருந்து பணிகளைப் பெற்றுச் செயல்படும் ஏறத்தாழ 400-க்கும் மேற்பட்ட துணை ஒப்பந்த நிறுவனங்கள் திருச்சி மாவட்டத்தில் மட்டுமின்றி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் உள்ளன.

Advertisement

 குறிப்பாக, திருவெறும்பூர், அரியமங்கலம், துவாக்குடி, புதுக்குடி, மாத்தூர் ஆகிய இடங்களில் மட்டும் 340 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 16,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 பெல் நிறுவனத்திடமிருந்து மூலப் பொருள்களைப் பெற்று பல்வேறு சாதனங்களை தயாரித்து இந்த துணை ஒப்பந்த நிறுவனங்கள் பெல் நிறுவனத்துக்கு வழங்கி வருகின்றன.

 பெல் நிறுவனத்துக்கு அதிக அளவில் பணி ஆணைகள் கிடைப்பதால் இதை நம்பி ஏராளமான துணை தொழில் நிறுவனங்கள் இந்த பகுதியில் தொடங்கப்பட்டுள்ளன.

 கடந்த நிதியாண்டில் (2011-2012) பெல் நிறுவனம் மூலம் இந்த நிறுவனங்களுக்கு உற்பத்தி இலக்காக 2.80 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டின் பிற்பகுதியில் மின் பற்றாக்குறையால் ஏற்பட்ட தொடர் மின் வெட்டு காரணமாக இந்த தொழிலகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் 2.10 லட்சம் டன் உற்பத்தி மட்டுமே மேற்கொள்ள முடிந்தது.

 "இந்த நிதியாண்டில் (2012-2013) துணை ஒப்பந்த நிறுவனங்களுக்கு 3 லட்சம் டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது' என்கிறார் பெல் சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவர் ("பெல்சியா') ராஜப்பா ராஜ்குமார்.

 அவர் மேலும் கூறியது: "கடந்த இரு மாதங்களாக நாளொன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. பகல் நேரத்தில் 6 மணி நேரமும், இரவில் 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு செய்யப்படுவதால் தொழிலகங்கள் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.

 மின்சாரம் இல்லாததால் பணிகள் நடைபெறவில்லை. பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் தொழிலாளர்களுக்குப் ஊதியம் அளிக்க வேண்டியுள்ளது. உற்பத்தி செய்யாமலேயே வழங்கப்படும் ஊதியம் மட்டும் இந்த தொழில் நிறுவனங்களுக்கு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ. 3 கோடி வரை இழப்பை ஏற்படுத்துகின்றன.

 வாரத்தில் ஒரு நாள் முழுவதும் மின் விடுமுறை (டர்ஜ்ங்ழ் ஏர்ப்ண்க்ஹஹ்) மற்றும் அனைத்து நாள்களிலும் பல மணி நேர மின் வெட்டு ஆகியவை காரணமாக தொழிலை மேற்கொள்வது பெரும் சிரமமாக உள்ளது என்றார் ராஜப்பா ராஜ்குமார்.

 மின்வெட்டால் இங்கு பணிகள் பாதிக்கப்படுவதால், வெளி மாநிலங்களில் உள்ள துணை தொழில் நிறுவனங்களுக்கு பணிகளை வழங்குகிறது பெல் நிறுவனம். இது கடந்த நிதியாண்டில் 1.5 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் 2 லட்சம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது என்கின்றனர் பெல்சியா நிர்வாகிகள்.

 எனவே, வாரத்தில் ஒரு நாள் மின் விடுமுறை அளித்து விட்டு, மற்ற நாள்களில் முழு நேரத்துக்கும் மின்சாரம் வழங்க வேண்டுமென தமிழக அரசிடம் பெல்சியா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுபோன்று கடுமையான மின் வெட்டு தொடர்ந்தால், இந்த நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும். எனவே, தடையற்ற மின்சாரம் வழங்குவதை அரசு உறுதிப்படுத்தி, தொழிலை சிரமமின்றி நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்பதுதான் துணை ஒப்பந்த நிறுவனங்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.