எரிவாயு ஏஜென்ஸி இல்லாததால் தாமதமாகும் விநியோகம்
பொன்னேரி, ஜூலை 4: பொன்னேரியில் சமையல் எரிவாயு ஏஜென்ஸி இல்லாததால் மீஞ்சூரில் இருந்து விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள் 10 முதல் 15 நாள்கள் வரை தாமதமாக விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதிவாசிகள் புகார்
பொன்னேரி, ஜூலை 4: பொன்னேரியில் சமையல் எரிவாயு ஏஜென்ஸி இல்லாததால் மீஞ்சூரில் இருந்து விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள் 10 முதல் 15 நாள்கள் வரை தாமதமாக விநியோகம் செய்யப்படுவதாக அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். ÷
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பொன்னேரியைச் சுற்றிலும் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு பாரத், இந்துஸ்தான், இண்டேன் ஆகிய நிறுவனங்களில் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
பாரத் எரிவாயு நிறுவனம் பொன்னேரியில் ஏஜென்ஸி நியமித்து அப்பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வந்தது.
அப்போது சமையல் எரிவாயு தீர்ந்த உடன் பதிவு செய்தால் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு விடும்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரி பகுதியில் பாரத் எரிவாயு ஏஜென்ஸி எடுத்து நடத்தி வந்த இரண்டு பங்குதாரர்களிடையே ஏற்பட்ட தொழில் பிரச்னை காரணமாக தனியார் ஏஜென்ஸியை பாரத் எரிவாயு நிறுவனம் ரத்து செய்தது. ÷இதன் பின்னர் செங்குன்றம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதியில் உள்ள ஏஜென்ஸிகளிடம் பொன்னேரி பகுதியில் இருக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று பிரிவாக பிரித்து அளிக்கப்பட்டனர்.இதன் பின்னர் பொன்னேரி பகுதியில் மீண்டும் தனியார் ஏஜென்ஸியை அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக பாரத் எரிவாயு நிறுவனத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அக்கோரிக்கை இன்னமும் நிறைவேற்றப்படாமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. இதன் காரணமாக பொன்னேரி பகுதியில் வசிக்கும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் மீஞ்சூரில் உள்ள பாரத் எரிவாயு ஏஜன்ஸியில் எரிவாயு சிலிண்டர் கோரி பதிவு செய்தால் 10 முதல் 15 நாள்கள் கழித்தே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குறித்த நேரத்துக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் 12 கி.மீ. தூரமுள்ள மீஞ்சூரில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டு வந்து விநியோகம் செய்வதால் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கூடுதல் கட்டணம், தாமதமாக விநியோகிப்படும் சிலிண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொன்னேரி நகரில் பாரத் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மக்களின் அவதியைப் போக்க திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.வேணுகோபால், பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்.ராஜா மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி ஆகியோர் இணைந்து பாரத் எரிவாயு ஏஜென்ஸியை மீண்டும் பொன்னேரியில் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.