மதுரை: ரேஷன் கார்டுகளில் ஒட்டப்படும் ஹாலோகிராம் ஸ்டிக்கர்களுக்குத் தட்டுப்பாடு இருப்பதால் அச்சடிக்கப்பட்ட ஏராளமான ரேஷன் கார்டுகள் தேக்கமடைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெறுவதற்கும், தனியார் மற்றும் பொதுத் துறைகளின் ஆவணப் பரிமாற்றங்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு உள்ளது. ரேஷன் கார்டு என்பது அடையாள ஆவணம் அல்ல, அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதற்கு மட்டுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அரசு, தனியார் துறைகளின் அனைத்து தேவைகளுக்கும் ரேஷன்கார்டுதான் அத்தாட்சி ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, எந்த பொருளும் வேண்டாம் என்பதற்கான அட்டை, தத்கல் முறையில் பெறப்படும் அட்டை, காவல் துறையினருக்கான அட்டை என வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டுகளின் தேவை அதிகரித்து வருவதால் போலி கார்டுகளும் புழக்கத்துக்கு வந்து விடுகின்றன. இதை தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ரேஷன்கார்டு விண்ணப்பங்கள் பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகே ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. முன்பு, அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர் பரிந்துரை செய்து, மாவட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்தாலே புதிய ரேஷன் கார்டு பெற்றுவிட முடியும். ஆனால், தற்போது மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்குப் பிறகே, புதிய ரேஷன்கார்டு அச்சடிக்க அனுப்பப்பட்டு வருகிறது.
இதன்படி, எல்காட் நிறுவனம் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடித்து கொடுக்கிறது. முதலில், சென்னையில் மட்டுமே ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது, அந்தந்த மாவட்டங்களிலேயே எல்காட் மூலமாக அச்சடித்து வழங்கப்படுகிறது.
போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக, தற்போது ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்டிக்கர்கள் சென்னையில் எல்காட் நிறுவனத்திடம் இருந்து தேவைக்கேற்ப, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அண்மைக் காலமாக மாவட்டங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் கிடைப்பதால், குறித்த நேரத்தில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்க முடிவதில்லை. இதனால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது.
தமிழகம் முழுவதும் இப் பிரச்னை இருப்பதாகவும், சில மாவட்டங்களில் அச்சடிக்கப்பட்ட ரேஷன் கார்டுகள், ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் இல்லாமல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்க முடியவில்லை.
மதுரை மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி நாளொன்றுக்கு சராசரியாக 400 விண்ணப்பங்கள் வருகின்றன. இவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்களில் 60 நாள்களுக்குள் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்றாலும், ஹாலோ கிராம் ஸ்டிக்கர்கள் தேவைக்கேற்ப வழங்கப்படாததால், குறித்த காலத்தில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மட்டும், ஏறத்தாழ 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கப்பட்டு, ஹாலோகிராம் ஸ்டிக்கர் இல்லாமல் தேக்கமடைந்திருக்கிறது. இதற்கிடையே, மேலும் 10 ஆயிரம் ரேஷன் கார்டுகள் அச்சடிப்பதற்கு தயாராக உள்ளன.
இதுபற்றி வழங்கல் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரேஷன்கார்டு வழங்கும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், தற்போது ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகே பரிசீலிக்கப்படுகின்றன.
ரேஷன்கார்டுகள் மீது ஒட்டப்படும் ஹாலோகிராம் ஸ்டிக்கர்கள் சென்னையில் இருந்து எல்காட் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படுகின்றன.
10 ஆயிரம் ஸ்டிக்கர் தேவைப்படும் இடத்தில், 2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஹாலோகிராம் ஸ்டிக்கர்களுக்குத் தட்டுப்பாட்டு இருக்கிறது. இதுகுறித்து அரசிடம் தெரிவித்துள்ளோம். இப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.