மந்தகதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்
திருவள்ளூர், மே 8: திருவள்ளூர் நகரில் ரூ.33 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மந்த கதியில் நடைபெறுகின்றன. ÷மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் முதல்நிலை நகராட்சியாக உள்ளது. மொ
திருவள்ளூர், மே 8: திருவள்ளூர் நகரில் ரூ.33 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மந்த கதியில் நடைபெறுகின்றன.
÷மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் முதல்நிலை நகராட்சியாக உள்ளது. மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருவள்ளூரிலும் ரூ.33 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.
÷திருவள்ளூரில் நகரில் மொத்தம் 10500 இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஈக்காடு, காக்களூர் பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இத்திட்டப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை 67 சதவீத அளவுக்கு மட்டுமே பணிகள் முடிந்துள்ளன. இத்திட்டத்துக்காக ஆங்காங்கே முக்கிய சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
÷முக்கியமாக ஜே.என்.சாலை, மாடவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் நெரிசல் ஏற்படுகிறது. பாதாள சாக்கடை இணைப்புக்கு நகராட்சி நிர்வாகம் கட்டணமும் நிர்ணயித்துள்ளது. அதன்படி ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குழாய்கள் உடையும் அபாயம் வீடுகள், கடைகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியின்போது 2.5 அங்குல குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை தரமற்றதாக உள்ளன. மேலும் அடிக்கடி உடைந்து விடும் அபாயம் உள்ளது.
÷நகராட்சி நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் இணைந்து பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை தீர்க்க வழிவகை காணப்படுமா என்பதே நகர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.