முகப்பு
தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து: அமைச்சர் செந்தில் பாலாஜி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Updated On : 10 நவம்பர், 2012 at 2:36 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனையில் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால், அவற்றின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

50 அதிகாரிகள் உள்பட 150 பேர்... பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் முன்கூட்டியே சிறப்பு ஏற்பாடுகளை போக்குவரத்துக் கழகங்கள் மேற்கொண்டிருந்தன.

Advertisement

பஸ் நிலையத்தில் குறிப்பிட்ட பஸ் எங்கு நிற்கிறது என்பதை பயணிகள் அறிந்து கொள்வதற்கும், போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதமாக வரும் பயணிகளுக்கு உதவுவதற்காகவும் கூடுதல் தகவல் மையங்கள் 6 நடைமேடைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகாரி அளவில் 50 பேரும், அனைத்துப் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் 100 பேர் என மொத்தம் 150 பேர் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் வரும் 12-ம் தேதி வரை பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அமைச்சர் நேரில் ஆய்வு: கோயம்பேடு பஸ் நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் அவருடன் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, "தினமணி' நிருபருக்கு அளித்த பேட்டி:

நான் உள்பட அனைத்து அதிகாரிகளும் இரவு முழுவதும் ஆய்வுப் பணியில் ஈடுபட உள்ளோம். வரும் 12-ம் தேதி வரை இதுபோன்று ஆய்வுகளை மேற்கொள்வோம்.

ஆம்னி பஸ் நிலையத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய போக்குவரத்துத் துறை இணை ஆணையர்கள் உள்பட 30 போக்குவரத்து ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

11 ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து: பயணிகள் அளித்த புகார்கள் மற்றும் அதிகாரிகளின் சோதனையின்பேரில் இதுவரை 11 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பஸ்களின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்தபோதும், அந்த பஸ்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், வெள்ளிக்கிழமை மட்டும் அந்த பஸ்கள் சென்னையிலிருந்து அந்தந்த ஊர்களுக்கு சென்றுவர அனுமதித்துள்ளோம். தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.