கட்டடம் உண்டு; மருத்துவர்கள்தான் இல்லை ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையின் அவலம்
திருவள்ளூர்
ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள ஊத்துக்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனையில் தரமான கட்டடங்கள் இருந்தும் போதிய மருத்துவர் இல்லாத அவலநிலை காணப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தின் கடைகோடியில் ஊத்துக்கோட்டை தாலுகா உள்ளது. ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள ஊத்துக்கோட்டையில் 5 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வசித்துவரும் 20 ஆயிரம் பேர் மற்றும் பென்னலூர்பேட்டை, தாஸ்குப்பம், பனப்பாக்கம், ஒதப்பை உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இம்மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனர்.
நாள்தோறும் 250-க்கு மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். தரமான கட்டட வசதிகள் நிறைந்த இம்மருத்துவமனையில் 20 படுக்கைகள் உள்ளன. ஆனால் 5 மருத்துவர்கள் பணிபுரிய இங்கு தற்போது ஒரு பெண் மருத்துவரே பணியில் உள்ளார். அவரும் திருத்தணியில் இருந்து வந்து செல்ல வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் மருத்துவர் எவரும் இருப்பதில்லை. 4 செவிலியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் நோயாளிகளுக்கு மருந்துகளை தரவேண்டிய மருந்தாளுநர் பணியிடம் காலியாக உள்ளது. அதேபோல் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு என தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாத நிலை உள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனம் மட்டுமே இங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் பாம்புக்கடிக்கு ஆளாவோர் அதிகம் உள்ளனர். தரமான கட்டட வசதி இருந்தும் இங்கு பிரசவம் பார்ப்பது மிகக் குறைவாகவே உள்ளது.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிகளவில் பிரசவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
பிரேத பரிசோதனை: அனைத்து வசதிகளும் இருந்தும் இல்லாத நிலையில் காணப்படும் இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுவதில்லை. 30 கி.மீ. தூரத்தில் உள்ள திருவள்ளூர் அல்லது 40 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்குதான் பிரேதங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
ஆந்திர மாநில எல்லையோர கிராம மக்களும் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கின்றனர். ஓரே மருத்துவர் மட்டும் பணியில் உள்ளதால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
எனவே மேலும் கூடுதல் மருத்துவர்களை நியமித்து இரவு நேரத்திலும் மருத்துவர் பணியில் இருக்குமாறு செய்ய வேண்டும். மருந்தாளுநர் பணியிடத்தையும் நிரப்பி தேவையான சிகிச்சை வசதிகள் கிடைக்க மாவட்ட அமைச்சர் ரமணா, ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊத்துக்கோட்டை பகுதி மக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.