முகப்பு
தமிழ்நாடு

அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஏப்ரல் 7-ல் முடிவு: உதயகுமார்

கூடங்குளம் அணுஉலையை மூடவலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது தொடர்பாக வரும் ஏப்ரல் 7ஆம்

Updated On : 12 மார்ச், 2013 at 2:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

கூடங்குளம் அணுஉலையை மூடவலியுறுத்தி அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவது தொடர்பாக வரும் ஏப்ரல் 7ஆம் தேதி அனைத்து சமுதாய தலைவர்களும் கூடி முடிவு செய்யப்படவுள்ளதாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.

அணுஉலையை கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டத்துக்கு தலைமை வகித்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

 கூடங்குளம் அணுஉலை தொடர்பான உண்மை தகவல்களைத் தர மறுக்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விவரங்களைக் கேட்டாலும் தருவதில்லை. அணுஉலைக்கு கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக இப்போது தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கேட்டால் தவசிகுமார் என்பவருக்கு ரூ.30 லட்சம் வந்துள்ளதாகவும், அது போராட்டத்துக்குப் பயன்படுத்தப்படுவதற்காக வந்ததாகவும்  திசைதிருப்புகிறார்கள்.

Advertisement

 இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாள்களில் தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ளனர். எங்களது போராட்டத்தின் வீரியம் குறையவில்லை. எங்களது வீரியம் வரும் தேர்தலில் வெளிப்படும். அத் தேர்தலை நாங்கள் குருஷேத்திர அறவழிப் போராகக் கருதுகிறோம்.

எங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து வரும் ஏப்ரல் 7ஆம் தேதி அனைத்து சமுதாய தலைவர்களும் கூடி முடிவு செய்யவுள்ளோம். எங்களது போராட்டத்துக்கு ஆதரவான அரசியல் கட்சிகள், அமைப்புகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

அசம்பாவிதம் இல்லை: ஐ.ஜி. அணுஉலையை கடல்வழியாக முற்றுகையிடும் போராட்டம் அசம்பாவிதம் எதுவும் இல்லாமல் நடந்து முடிந்ததாக தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அணுஉலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். புதன்கிழமை பந்த் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தால் எவ்வித பிரச்னைகளும் ஏற்படவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.