முகப்பு
தமிழ்நாடு

போலீஸ் பற்றாக்குறை: அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்

பொன்னேரி, மீஞ்சூர் காவல்நிலையங்களில் போதிய போலீஸார் பணியில் இல்லாததால் இப்பகுதிகளில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:28 AM
பகிர்:

பொன்னேரி, மீஞ்சூர் காவல்நிலையங்களில் போதிய போலீஸார் பணியில் இல்லாததால் இப்பகுதிகளில் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பேரூராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு கோட்டாட்சியர், வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

மேலும் இப்பகுதிகளில் தேசிய வங்கிகள், திரையரங்குகள், 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் ஆகியவை அமைந்துள்ளன.

இங்குள்ள ரயில்நிலைய சாலையில் அமைந்துள்ளது பொன்னேரி காவல் நிலையம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காவல்நிலையம் இயங்கி வருகிறது.

மெதூர், கூடுவாஞ்சேரி, ஏலியம்பேடு, கொக்குமேடு, புலிக்குளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குள் அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதே போல மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம், சமையல் எரிவாயு நிரப்பும் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.

காவலர்கள் பற்றாக்குறை

இவ்வாறு பெரிய அளவிலான எல்லைகளை கொண்டுள்ள பொன்னேரி, மீஞ்சூர் காவல் நிலையங்களில் போதிய போலீஸார் பணியில் இல்லை என கூறப்படுகிறது.

இரண்டு காவல் நிலையங்களிலும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், எழுத்தர், தலைமை காவலர் என பணிபுரிய வேண்டிய மொத்த காவலர்கள் எண்ணிக்கை 64. 

ஆனால் தற்போது இரண்டு காவல் நிலையங்களிலும் ஆய்வாளர் உள்பட ஒற்றை இலக்க எண்ணிக்கையிலான போலீஸாரே பணியில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

போலீஸார் பற்றாக்குறையால் குற்றச்சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் வழிப்பறி, திருட்டு போன்றவைகளும் நடைபெறுவதால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பு கூறியதாவது:

கோயில் திருவிழா, அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம் மற்றும் மருத்துவ விடுப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குறைந்த எண்ணிக்கையில் போலீஸார் பணியில் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தீர்வு என்ன?

மீஞ்சூர் காவல்நிலைய எல்லைக்குள் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை குறைக்க அங்கு போதிய காவலர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் அத்திப்பட்டு பகுதியில் புதிதாக காவல்நிலையம் அமைக்க வேண்டும்.

அதே போல பொன்னேரி பகுதியில் தற்போது இயங்கி வரும் காவல் நிலையத்தை நகர காவல் நிலையமாக மாற்ற வேண்டும்.

பொன்னேரியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்களை குறைக்க புதிதாத பொன்னேரி தாலுகா காவல் நிலையம் ஒன்றை புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →