தாற்காலிக சிறப்பு தபால் நிலையம் சபரிமலையில் நாளை முதல் இயங்கும்
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக தாற்காலிக சிறப்பு கிளை தபால் அலுவலகம் சனிக்கிழமை (நாளை) முதல் செயல்பட உள்ளது.
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக தாற்காலிக சிறப்பு கிளை தபால் அலுவலகம் சனிக்கிழமை (நாளை) முதல் செயல்பட உள்ளது.
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைக்காக 15-ஆம் தேதி(இன்று) முதல் நடை திறக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி அடைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை விழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக சிறப்பு தபால் சேவை மையம் செயல்பட உள்ளது. வரும் நவம்பர் 16-ஆம் தேதி (நாளை) இந்த சேவை துவங்கி, 2014 ஜனவரி 19-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். கோவில் சன்னிதானத்தில் தேவஸ்தான அலுவலகம் அருகே தபால் அலுவலகம் செயல்படும். கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஸ்பீடு போஸ்ட் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
Advertisement
இதன் முகவரி: போஸ்ட் மாஸ்டர், சபரிமலை போஸ்ட் ஆபீஸ், பத்தினம்திட்டா மாவட்டம், கேரளா- 689 713. சபரிமலை அடிவாரமான பம்பா நதிக்கரையில் மட்டுமே சில ஆண்டுகளுக்கு முன்பு தபால் சேவை இருந்து வந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது சபரிமலை சன்னிதானத்தில் தற்காலிகமாகச் செயல்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரசாதங்களையும் தபால் மூலம் பக்தர்கள் அனுப்பி வந்தனர். ஆனால், தற்போது பிரசாதங்கள் அனுப்பும் வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தபால் மூலம் பிரசாதம் வழங்கும் முறையை மீண்டும் துவங்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.